Archives: மார்ச் 2017

மகத்தான அழைப்பு

ஓ, தாகமாயிருக்கிறவர்களே, நீங்கள் எல்லாரும் தண்ணீர்களண்டைக்கு வாருங்கள்; பணமில்லாதவர்களே, நீங்கள் வந்து, வாங்கிச் சாப்பிடுங்கள்; நீங்கள் வந்து, பணமுமின்றி விலையுமின்றித் திராட்சரசமும் பாலும் கொள்ளுங்கள்.
ஏசாயா 55:1

சமீபத்தில், மின்னஞ்சலில் பல அழைப்பிதழ்களைப் பெற்றேன். ரியல் எஸ்டேட், ஆயுள் காப்பீடு, பணி ஓய்வு சம்பந்தப்பட்ட “இலவச” கருத்தரங்குகளில் பங்குபெறுமாறு சில அழைப்பிதழ்கள் இருந்தன. ஆனால் ஒரு அழைப்பிதழ் என் நீண்டகால நண்பர் சம்பந்தப்பட்டது. அவரை கவுரவிக்கும் விழாவிற்கான அழைப்பிதழ் அது. ஆகவே “கண்டிப்பாக நான் வருகிறேன்” என்று உடனடியாக அதற்கு பதில் அனுப்பினேன். அழைப்பு + ஆசை = சம்மதம்

வேதாகமத்தில் இருக்கும் மிகச்சிறந்த அழைப்புகளில் ஒன்றைத் தான் ஏசாயா 55:1ல் காண்கிறோம். மிகவும் இக்கட்டான சூழ்நிலைகளில் இருந்த மக்களிடம் தேவன் இவ்வாறு பேசுகின்றார். “ஓ, தாகமாயிருக்கிறவர்களே, நீங்கள் எல்லாரும் தண்ணீர்களண்டைக்கு வாருங்கள்; பணமில்லாதவர்களே, நீங்கள் வந்து, வாங்கிச் சாப்பிடுங்கள்; நீங்கள் வந்து, பணமுமின்றி விலையுமின்றித் திராட்சரசமும் பாலும் கொள்ளுங்கள்.” இது தேவனின் ஓர் ஒப்பற்ற அழைப்பு. உள்ளான மனிதனுக்கு தேவையான சத்துவத்தையும், நிறைவான ஆவிக்குரிய திருப்தியையும், நித்திய ஜீவனையும் இந்த அழைப்பின் மூலமாக நாம் பெற்றுக்கொள்கிறோம் (வச. 2-3). வேதாகமத்தின் கடைசி அதிகாரத்தில் இயேசுவினுடைய அழைப்பு மீண்டும் இடம் பெற்றிருப்பதை காணலாம்: “ஆவியும் மணவாட்டியும் வா என்கிறார்கள்; கேட்கிறவனும் வா என்பானாக; தாகமாயிருக்கிறவன் வரக்கடவன்; விருப்பமுள்ளவன் ஜீவத்தண்ணீரை இலவசமாய் வாங்கிக்கொள்ளக்கடவன்” (வெளி. 22:17).

நாம் இறந்த பின்புதான் நித்திய ஜீவன் ஆரம்பிக்கும் என்று நம்மில் பலர் தவறாக எண்ணிக் கொண்டிருக்கிறோம். ஆனால் நிஜத்தில், நாம் இயேசு கிறிஸ்துவை நமது இரட்சகரும், ஆண்டவருமாக ஏற்றுக்கொண்ட அந்த நொடியிலேயே அது தொடங்கிவிடுகிறது.

அவருக்குள் நித்திய ஜீவனை கண்டடையும்படியாக நம்மை அழைக்கும் தேவனது அழைப்புதான், மகத்தான அழைப்பு! அழைப்பு + ஆசை = சம்மதம்

ஜீவனும் மரணமும்

மரணப்படுக்கையில் இருந்த என்னுடைய நண்பனின் சகோதரர் மரித்த காட்சியை என்னால் மறக்கமுடியாது. அவரது படுக்கையின் பக்கத்தில் அமர்ந்து கொண்டிருந்த சாதாரணமானவர்களை, அசாதாரணமான ஒருவர் சந்தித்தார். நாங்கள் மூவரும் அமைதியாக பேசிக்கொண்டிருந்தோம். திடீரென ரிச்சர்டின் (Richard) சுவாசிக்கும் நிலை கடினமானது. நாங்கள் அவர் அருகே சென்று அவரைப் பார்த்தபடி ஜெபித்துக் காத்துக்கொண்டிருந்தோம். அவரது கடைசி மூச்சை அவர் உள் வாங்கிய பொழுது, அது ஓர் பரிசுத்த தருணமாகவே காணப்பட்டது. நாற்பது வயதில் மரித்துக் கொண்டிருந்த ஓர் அற்புதமான மனிதனின் நிலையை எண்ணி கண்ணீர் சிந்திக் கொண்டிருந்த எங்களை தேவனுடைய பிரசன்னம் சூழ்ந்து கொண்டது.

தேவன் உண்மையுள்ளவர் என்பதனை, அநேக பரிசுத்தவான்கள் மரிக்கும் தருவாயிலும் உணர்ந்தனர். உதாரணத்திற்கு, யாக்கோபு மரிப்பதற்கு முன்னர் “நான் என் ஜனத்தாரோடே சேர்க்கப்படப்போகிறேன்” (ஆதி. 49:29-33) என்று அவரது பிள்ளைகளிடம் கூறினார். யாக்கோபின் குமாரனாகிய யோசேப்பும் அவரது மரணத்தை குறித்து தன் சகோதரரிடம, “நான் மரணமடையப் போகிறேன்” என அறிவித்து, அவர்களது விசுவாசத்தில் நிலைத்து நிற்கும்படியாக அறிவுறுத்தினார். மரிக்கும் தருவாயிலும் அவர் சமாதானத்தோடிருந்தார். அவரது சகோதரர் தேவனையே சார்ந்து ஜீவிக்கவேண்டும் என்ற ஆவலுடன் இருந்தார் (50:24).

நாம் எப்போது நம்முடைய கடைசி மூச்சை இழப்போம் என்று யாருக்கும் தெரியாது. ஆனால் தேவன் நம்மோடு இருப்பார் என்ற உறுதியுடன் இருக்க நமக்கு உதவி செய்யுமாறு அவரிடம் கேட்கலாம். தமது பிதாவின் வீட்டில் நமக்கு ஓர் ஸ்தலத்தை ஆயத்தம் பண்ணுவேன் என்று வாக்களித்த இயேசுவின் வார்த்தையை நாம் நம்பி உறுதியுடன் ஜீவிக்கலாம்.

அக்கினி சோதனை

கடந்த குளிர்காலத்தில் கொலராடோவில் (Colorado) இருந்த ஒரு இயற்கை வரலாற்று அருங்காட்சியகத்திற்கு சென்றிருந்த பொழுது, ஆஸ்பென் மரத்தை (காட்டரசுமரம்) பற்றி சில குறிப்பிடத்தக்க உண்மைகளை நான் கற்றுக்கொண்டேன். ஒரே ஒரு விதைக்கு, மெல்லிய தண்டுடைய ஆஸ்பென் மரத்தோப்பை உருவாக்கக்கூடிய ஆற்றல் இருக்கின்றது. அனைத்து வேர்களும் அந்த ஒருவிதையிலிருந்து கிளம்பும். இந்த வேர் அமைப்புகள் பல்லாயிரக்கணக்கான வருடங்களாக நிலத்தடியில் மந்தமான நிலையில், எந்த ஒரு மரத்தையும் உற்பத்தி செய்யாமல் தூங்கிக் கொண்டிருக்க முடியும். வெள்ளம், நெருப்பு அல்லது பனிச்சரிவின் வரவினால் காட்டில் ஏற்படும் வெற்றிடத்திற்காக அவை காத்துக்கொண்டிருக்கும். ஓர் இயற்கைப் பேரழிவினால் நிலம் அகற்றப் பட்டவுடன், மரத்தின் வேர்கள் சூரியனின் வெப்பத்தை உணர ஆரம்பிக்கும். பிறகு அவ்வேர்கள் கன்றுகளை அனுப்பத் தொடங்கும், அவை மரங்களாக வளர ஆரம்பிக்கும்.

பேரழிவின் மூலம் ஆஸ்பென் மரங்களின் வாழ்வில் ஓர் புதிய வளர்ச்சி சாத்தியமானதை நாம் காணலாம். கஷ்டங்கள் மத்தியில் நமது விசுவாசமும் இப்படித்தான் வளர்கின்றது என்று யாக்கோபு கூறுகின்றார். “என் சகோதரரே, நீங்கள் பலவிதமான சோதனைகளில் அகப்படும்போது, உங்கள் விசுவாசத்தின் பரீட்சையானது பொறுமையை உண்டாக்குமென்று அறிந்து, அதை மிகுந்த சந்தோஷமாக எண்ணுங்கள். நீங்கள் ஒன்றிலும் குறைவுள்ளவர்களாயிராமல், பூரணராயும் நிறைவுள்ளவர்களாயும் இருக்கும்படி, பொறுமையானது பூரண கிரியை செய்யக்கடவது” (யாக். 1:2-4).

சோதனையைச் சந்திக்கும்போதும், அக்கினியில் நடக்கும்போதும் மகிழ்ச்சியுடன் இருப்பது கடினம் தான். ஆனால் இப்படிப்பட்டதான கஷ்டமான சூழ்நிலைகளை தேவன் பயன்படுத்தி, நம்மை முதிர்ந்த மற்றும் முழுமையான நிலைக்கு கொண்டு வருவார் என்பதை நாம் விசுவாசிக்க வேண்டும். ஆஸ்பென் மரங்களைப்போல், சோதனைகளை சந்திக்கும் காலம், விசுவாசத்தில் நாம் வளரும் தருணமாக மாறலாம். பிரச்சனைகள் நம் இருதயத்தில் ஓர் வெற்றிடத்தை உண்டு பண்ணும்போது தேவனின் வெளிச்சம் நமக்குள் பிரவேசித்து நம்மை தொடும் தருணங்களாக மாறும்.

நல்ல கனியை கொடுப்பது

விமானத்தின் ஜன்னல் வழியாக நான் பார்த்த காட்சி என்னை வியப்பில் ஆழ்த்தியது. வறண்டு கிடந்த இரண்டு மலைகளுக்கு நடுவே ஓர் குறுகிய நாடா போன்று வளர்ந்திருந்த கோதுமை வயல்களையும், பழத்தோட்டங்களையும் கண்டேன். பள்ளதாக்கின் நடுவே ஓர் நதி ஓடியது. ஜீவனைத் தரும் நதியில்லாமல் எந்த கனியும் அங்கு உண்டாகியிருக்க முடியாது.

நிறைவான அறுவடைக்கு எப்படி சுத்தமான தண்ணீர் ஆதாரமாக இருக்கிறதோ, அதைப் போலவே என்னுடைய வாழ்வில் வெளிப்படும் என் வார்த்தை, செயல், மற்றும் அணுகுமுறை என்னும் “கனி”யின் தரமானது என்னுடைய ஆவிக்குரிய போஷாக்கினால்தான் உண்டாகுகிறது. சங்கீதக்காரன் சங்கீதம் 1ல் “கர்த்தருடைய வேதத்தில் பிரியமாயிருக்கிற மனிதன்... நீர்க் கால்களின் ஓரமாய் நடப்பட்டு, தன் காலத்தில் தன் கனியைத் தருபவனாக இருப்பான்” என்று கூறுகிறான். “ஆவியின் கனியோ, அன்பு, சந்தோஷம், சமாதானம், நீடியபொறுமை, தயவு, நற்குணம், விசுவாசம், சாந்தம், இச்சையடக்கம்” என்று ஆவியானவருடன் சேர்ந்து நடப்பவரை பற்றி பவுல் கலாத்தியர் 5ல் குறிப்பிட்டுள்ளார் (வச. 22-23).

சில நேரங்களில் நான் சூழ்நிலைகளைப் பார்க்கும் விதம் சரியில்லாமலிருக்கிறது அல்லது என் சொற்களிலும், செயல்களிலும் தொடர்ந்து அன்பற்ற தன்மையே வெளிப்படுகிறது. தேவனுடைய பிரசன்னத்திலும், அவருடைய வார்த்தையிலும் நேரத்தை செலவிட தவறியதால்தான், நான் நல்ல கனியைக் கொடுக்கவில்லை என்பதை அறிந்து கொண்டேன். ஆனால் எப்பொழுதெல்லாம் நான் தேவனைச் சார்ந்து, அவருக்குள் வேர் கொண்டு நிலைத்து நின்றேனோ, அப்பொழுதெல்லாம் நல்ல கனியை கொடுத்தேன். அப்பொழுது மற்றவர்களுடன் நான் பழகியபோது, பொறுமையும், இரக்கமும் என் குணாதிசயமாக வெளிப்பட்டது. மேலும் குறைகூறுவதை தவிர்த்து, நன்றியுள்ள நிலைப்பாட்டை தேர்ந்தெடுப்பது எளிதாக இருந்தது.

தம்மையே நம்மிடத்தில் வெளிப்படுத்தியிருக்கும் தேவனே நமது வலிமை, ஞானம், மகிழ்ச்சி, புரிதல் மற்றும் அமைதியின் ஊற்றாக இருக்கின்றார் (சங். 119:28, 98, 111, 144, 165). அவருக்கு நேராக நம்மை நடத்தும் வார்த்தைக்குள் நமது ஆத்துமாவைப் புதைத்துக்கொண்டால், ஆவியானவர் நம் வாழ்வில் செய்யும் வேலை தெளிவாக வெளிப்படும்.

பிம்பத்தைக் கையாளுதல்

வின்ஸ்டன் சர்ச்சிலின் (Winston Churchill) 80வது பிறந்தநாளைக் கொண்டாட, பிரிட்டிஷ் நாடாளுமன்றம் கிரஹாம் சதர்லேண்ட் (Graham Sutherland) என்ற பிரபலமான ஓவியரை அவரது உருவ படத்தை வரைவதற்கு நியமித்தது. “நீங்கள் எப்படி என்னை வரையப்போகிறீர்கள்? அழகிய தேவதூதன் போலவா அல்லது பயங்கரமான நாய் (Bulldog) போலவா?” என்று சர்ச்சில் அவரிடம் கேட்டதாக கூறப்படுகின்றது. அவரை குறித்த இந்த இரண்டு பிரபலமான கருத்துகளும் அவருக்கு பிடித்திருந்தது. எனினும், சதர்லேண்ட், தான் பார்த்தபடி வரையப்போவதாக கூறினார்.

சர்ச்சிலுக்கு தன் உருவப்படம் திருப்தியளிக்கவில்லை. சதர்லாந்தின் உருவப் படத்தில் நாற்காலியில் சரிந்த நிலையில் அமர்ந்திருந்து, தனக்கே உரித்தான முத்திரை கோபத்துடன் காணப்பட்டார் - அதுதான் நிஜமும்கூட, ஆனால் அது நன்றாயிருக்காதல்லவா? ஆதிகாரப்பூர்வமாக அப்படம் திறக்கப்பட்ட பின்பு, சர்ச்சில், அந்த ஓவியத்தை மறைத்து வைத்தார். பின்னர் அது இரகசியமாக அழிக்கப்பட்டது.

சர்ச்சில் போல், நம்மில் பலர் நமக்குள் நம்மை பற்றிய ஓர் பிம்பத்தை வரைந்துள்ளோம். அதைத்தான் பிறரும் காணவேண்டும் என்றும் விரும்புகிறோம். அது வெற்றி, தெய்வபக்தி, அழகு அல்லது வலிமை போன்ற காரியங்களை குறித்ததாக இருக்கலாம். நாம் நமது ‘அசிங்கமாக’ பக்கங்களை மறைக்க மிகவும் சிரத்தை எடுத்துக்கொள்வோம். ஒருவேளை நம்முடைய நிஜமான முகத்தை பிறர் கண்டால் நம்மை நேசிக்காமல் போய் விடுவார் என்ற பயத்தினால்தான் இவ்வாறு செய்கிறோம்.

பாபிலோன் இஸ்ரவேலரை சிறைபிடித்து சென்ற போது, அவர்கள் மிகவும் மோசமான நிலைக்குச் சென்றிருப்பதை நாம் காண்கிறோம். அவர்களுடைய பாவத்தின் நிமித்தமாகத் தான் தேவன் அவர்களுடைய எதிரிகள் அவர்களை கைப்பற்ற அனுமதித்தார். ஆயினும் அவர்களை பயப்பட வேண்டாம் என்றும் அறிவுறுத்தினார். ஒவ்வொருவரின் பெயர்களையுமறிந்த தேவன், அவர்களது அவமானகரமான சோதனைகளிலும் கூடவே இருந்தார் (ஏசா. 43:1-2). அவருடைய கரத்தில் அவர்கள் ‘விலைமதிப்பற்ற பொக்கிஷமாகவும்’ (வச. 4), பாதுகாக்கப்பட்டவர்களாகவும் இருந்தனர் (வச. 13). அவர்கள் பாவங்களினால் கறைப்பட்டிருந்தபோதிலும், தேவன் அவர்களை நேசித்தார்.

இந்த உண்மை நமக்குள் ஆழமாக வேரூன்றிவிட்டால், பிறர் ஒப்புதலுக்காகவும், அங்கீகாரத்திற்காகவும் நாம் ஏங்கித் தவிக்க மாட்டோம். நாம் யார் என்கிற உண்மையை தேவன் முற்றிலுமாக அறிந்தபொழுதும், நம்மை அளவற்ற அன்பினால் நேசிக்கிறார் (எபே. 3:18).

தொடர்புடைய தலைப்புகள்

> odb

மகிழ்ச்சியும் ஞானமும்

ஜப்பானில் ஒவ்வொரு வசந்த காலத்திலும் இனிமையான நறுமணப் பூக்கள் நேர்த்தியான வெளிர் மற்றும் துடிப்பான இளஞ்சிவப்புகளால் நிரப்பப்படுகின்றன. இது குடியிருப்பாளர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளின் உணர்வுகளை மகிழ்விக்கிறது. குறுகிய காலம் மட்டுமே இருக்கக்கூடிய அந்த மலர்கள் ஜப்பானியர்களிடம், குறுகிய வாழ்க்கை அனுபவத்தின் மேன்மையை தன் அழகினாலும் வாசனையினாலும் ஏற்படுத்திச் செல்கிறது. திடீரென்று ஏற்படும் மகிழ்ச்சி மாற்றத்தை அவர்கள் “வாழ்வின் நிலையற்ற தன்மை” என்று அழைக்கிறார்கள்.

மனிதர்களாகிய நாம் மகிழ்ச்சியின் உணர்வுகளைத் தேடவும் அதில் நீடிக்கவும் விரும்புகிறோம் என்பது புரிந்துகொள்ளத்தக்கது. ஆயினும்கூட, வாழ்க்கை கஷ்டங்களால் நிரம்பியுள்ளது என்பதன் அர்த்தம், அன்பான தேவன் மீதான நம்பிக்கை என்னும் பூதக்கண்ணாடியின் மூலம் வலி மற்றும் இன்பம் இரண்டையும் பார்க்கும் திறனை நாம் வளர்த்துக்கொள்ள வேண்டும். நாம் அவிசுவாசத்துடனோ இருக்கவோ அல்லது வாழ்க்கையைப் பற்றிய யதார்த்தமற்ற பார்வையை நாமே உருவாக்கிக்கொள்ளவோ அவசியமில்லை.

பிரசங்கி புத்தகம் நமக்கு ஒரு பயனுள்ள மாதிரியை வழங்குகிறது. இந்த புத்தகம் சில நேரங்களில் எதிர்மறையான அறிக்கைகளின் பட்டியலாக கருதப்பட்டாலும், “எல்லாம் மாயை” (1:2) என்று எழுதிய அதே சாலெமோன் ராஜா, “வேறொரு நன்மையும் இல்லை” என்று கூறி, வாழ்க்கையில் எளிமையான விஷயங்களில் மகிழ்ச்சியைக் காண வாசகர்களை ஊக்குவிக்கிறார். “புசிப்பதும் குடிப்பதும் மகிழ்வதுமேயல்லாமல் சூரியனுக்குக்கீழே மனுஷனுக்கு வேறொரு நன்மையும் இல்லை” (8:15).

அழகான பருவங்களிலும் கடினமான காலங்களிலும் (3:11-14; 7:13-14), பரலோகப்பார்வையில் எதுவுமே நிரந்தரமானது இல்லை என்பதை அறிந்து, ஞானத்தை அடையவும் தேவனுடைய கிரியைகளை  பார்க்கும்படியும் உதவிசெய்யும்படி (வச. 16-17) தேவனிடம் நாம் கேட்கும்போது நமக்கு மகிழ்ச்சி ஏற்படுகிறது.

 

ஓர் தனிக் குரல்

முதலாம் உலகப் போரை முடிவுக்குக் கொண்டுவந்த பாரிஸ் அமைதி மாநாட்டிற்குப் பிறகு, பிரெஞ்சு மார்ஷல் ஃபெர்டினாண்ட் ஃபோச் கசப்புடன், “இது சமாதானம் அல்ல. இது இருபது வருட தற்காலிக போர் நிறுத்தம்” என்றார். “அனைத்து போர்களையும் முடிவுக்குக் கொண்டுவரும் போரானது” பயங்கர மோதலாக இருக்கும் என்ற பிரபலமான கருத்துக்கு ஃபோச்சின் கருத்து முரண்பட்டது. இருபது ஆண்டுகள் இரண்டு மாதங்களுக்குப் பிறகு, இரண்டாம் உலகப் போர் வெடித்தது. ஃபோச் சொன்னது சரிதான்.

நீண்ட காலத்திற்கு முன்பு, தேவனுடைய உண்மையான தீர்க்கதரிசியான மிகாயா, இஸ்ரேலுக்கு கடுமையான இராணுவ முடிவுகளைத் தொடர்ந்து தீர்க்கதரிசனமாய் உரைத்தார் (2 நாளாகமம் 18:7). இதற்கு நேர்மாறாக, ஆகாபின் நானூறு பொய் தீர்க்கதரிசிகள் அவர்களுக்கு யுத்தத்தில் வெற்றியை முன்னறிவித்தனர். ஆகாபின் அரண்மனையைச் சேர்நத ஒருவன் மிகாயாவிடம், “இதோ, தீர்க்கதரிசிகளின் வார்த்தைகள் ஏகவாக்காய் ராஜாவுக்கு நன்மையாயிருக்கிறது; உம்முடைய வார்த்தையும் அவர்களில் ஒருவர் வார்த்தையைப்போல இருக்கும்படிக்கு நன்மையாகச் சொல்லும் என்றான்” (வச. 12). 

அதற்கு மிகாயா, “என் தேவன் சொல்வதையே சொல்வேன் என்று”..(வச. 13), “இஸ்ரவேலர் எல்லாரும் மேய்ப்பனில்லாத ஆடுகளைப்போல மலைகளில் சிதறப்பட்டதைக் கண்டேன்” (வச. 16) என்று சொல்லுகிறான். மிகாயா சொன்னது சரிதான். அராமியர்கள் ஆகாபை யுத்தத்தில் கொன்றனர் (வச. 33-34; 1 இராஜாக்கள் 22:35-36).

மிகாயாவைப் போலவே, இயேசுவைப் பின்பற்றும் நாமும் பிரபலமான மக்களின் நம்பிக்கைகளுக்கு முரணாகவே போதிக்கிறோம். இயேசு, “என்னாலேயல்லாமல் ஒருவனும் பிதாவினிடத்தில் வரான்” (யோவான் 14:6) என்று சொல்லுகிறார். இந்த செய்தி முரண்பாடாய் தெரிவதினால் அநேகர் அதை விரும்புவதில்லை. ஆனாலும் கிறிஸ்து ஓர்ஆறுதலான செய்தியைக் கொண்டு வருகிறார். தம்மிடம் வருகிற யாவரையும் அவர் வரவேற்கிறார்.

 

ஆவிக்குரிய சுவடை விட்டுச்செல்லுதல்

பதின்ம வயதினர்களாக, எங்களுடைய அம்மா இயேசுவை ஏற்றுக்கொள்ள தீர்மானித்த முடிவை எங்களால் புரிந்துகொள்ள முடியவில்லை. ஆனால் அவருக்குள் நாங்கள் கண்ட மாற்றங்களை எங்களால் மறுக்க முடியவில்லை. அவரிடத்தில் அதிக மனநிறைவும் மகிழ்ச்சியும் காணப்பட்டது. திருச்சபையிலும் உண்மையாய் ஊழியம்செய்ய ஆரம்பித்தார். வேதத்தைக் கற்றுக்கொள்ளும் ஆர்வம் அவருக்கு அதிகம் இருந்ததினால் வேதாகமக் கல்லூரியில் படித்து பட்டம் பெற்றார். சில வருடங்களுக்குப் பிறகு, என் சகோதரி கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டு அவருக்கு ஊழியம் செய்ய ஆரம்பித்தாள். அதன் பிறகு சில வருடங்கள் கழித்து நானும் இயேசுவை ஏற்றுக்கொண்டு அவருக்கு ஊழியம் செய்ய ஆரம்பித்தேன். பல ஆண்டுகளுக்குப் பிறகு, என் தந்தையும் எங்களுடன் சேர்ந்தார். கிறிஸ்துவை ஏற்றுக்கொள்ளும் என் அம்மாவின் தீர்மானம் எங்களுடைய குடும்பத்தின் ஒவ்வொரு அங்கத்தினரையும் படிப்படியாய் பாதித்தது. 

அப்போஸ்தலனாகிய பவுல் தீமோத்தேயுவுக்கு தனது கடைசி நிருபத்தை எழுதி, இயேசுவின் மீதான விசுவாசத்தில் நிலைத்திருக்க ஊக்குவித்தபோது, தீமோத்தேயுவின் ஆவிக்குரிய பாரம்பரியத்தைக் குறித்து குறிப்பிடுகிறார். “அந்த விசுவாசம் முந்தி உன் பாட்டியாகிய லோவிசாளுக்குள்ளும் உன் தாயாகிய ஐனிக்கேயாளுக்குள்ளும் நிலைத்திருந்தது; அது உனக்குள்ளும் நிலைத்திருக்கிறதென்று நிச்சயித்திருக்கிறேன்” (2 தீமோத்தேயு 1:5). 

அம்மாக்கள் மற்றும் பாட்டிகளே, உங்கள் முடிவுகள் தலைமுறைகளை பாதிக்கலாம்.

தீமோத்தேயுவின் அம்மாவும் பாட்டியும் எவ்வளவு அழகாக அவருடைய விசுவாசத்தை வளர்க்க உதவினார்கள். அதனால் அவர் தேவனுடைய அழைப்பிற்கு பாத்திரவானாய் மாறினார். 

இந்த அன்னையர் தினத்திலும் இதற்கு பின்னரும், இயேசுவைப் பின்பற்ற முடிவு செய்த தாய்மார்களை கௌரவிப்போம்.

நம் அன்புக்குரியவர்களுக்காக ஆவிக்குரிய சுவடை விட்டுச் செல்வோம்.